.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, June 10, 2005

சுகம் சுகமே

Your Ad Here

தன்னையே அறியாதவன் கடவுளை எப்படி அறிந்துகொள்ளமுடியும் என்ற வாதம் எனக்கு சரியென்று பட்டு என்னைத் தேடி ஆன்மீக உலகில் பரதேசி போல அலைய ஆரம்பித்ததில் புதிது புதிதாய் பல விஷயங்கள் கண்ணில் தட்டுப்பட்டன. அப்படி நான் இடறி விழுந்தவற்றில் ஒன்றுதான் இந்த சுகம் செயல்முறை. வெகு சுலபமாக நமக்குள் இருக்கும் குப்பைகளை அகற்ற உதவுகிறது. சில நிமிடங்கள் போதும். அமைதியாய் அமர வேண்டும் என்ற கட்டாயம் கூட இல்லை.
ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய உத்தி இது. மேலும் விளக்கம் இங்கே:
http://www.nilacharal.com/tamil/specials/sugam.html

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 03, 2005

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்

Your Ad Here

தமிழ் சமுதாயம் பொதுவாகவே உணர்ச்சிகரமானது. அன்பானாலும் சரி அடியானாலும் சரி இரண்டுமே எக்ஸ்ட்ரீமாகத்தான் இருக்கும் நம்மிடம். அதே போல் நம் சொந்தக் கருத்துக்களின் மேல் அதீத நம்பிக்கை. நாம் நினைப்பதே சரி என்ற பிடிவாதம் அதிகம். அடுத்தவர் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முயலாவிட்டாலும் கேட்கிற பொறுமை கூட நம்மில் பலருக்கு இருப்பதில்லை. நிலாச்சாரல் காரணமாய் பல மனிதர்களிடம் தொடர்பிலிருப்பதில் நான் சந்திக்கிற பிரச்சனைகளில் முக்கியமானது இது.

அதற்கு சிறந்த உதாரணம் ஒன்றைக் கேளுங்கள்:
ஒரு இசையமைப்பாளரை தெய்வமாகப் பூஜிக்கும் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நிலாச்சாரலுக்காக இசை விமர்சனமும் இசை ரசிகர் மன்றக் கூட்டம் குறித்த ரிப்போர்ட் ஒன்றும் அனுப்பியிருந்தார்.

அந்த ரிப்போர்ட்டிலிருந்து சுவாரஸ்யமாய் கட்டுரை பண்ண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இசை விமர்சனத்தில் அப்பட்டமாக அந்த இசை அமைப்பாளர் மேல் அவர் வைத்திருக்கும் பக்தி பளிச்சிட்டது. விமர்சனம் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதனால் அவருக்கு எனது எண்ணத்தை எழுதி பிரசுரிக்க இயலாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தேன். அவருக்கு வந்ததே கோபம்!

அதுவரை அவர் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து நாங்கள் எழுதியதெல்லாம் அவருக்கு நொடியில் மறந்து போயிற்று. சிடு சிடுவென்ற ஒரு நீண்ட அஞ்சல். எனக்கு சிறந்தவற்றை ஆதரிக்கும் முதிர்ச்சி இல்லை என்றும் நான் குறுகிய மனப்பான்மை கொண்டவள் என்றும் அர்ச்சனை! எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

ஒரு தனி மனிதரைத் தெய்வமாய் அவர் கொண்டாடிவிட்டுப் போகட்டும். அது அவர் விருப்பம். ஆனால் அவரது ரசனைதான் சிறந்தவற்றுக்கு அளவுகோல் என்று மற்றவர் மேல் திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? (அது சரி, அவரின் நோயாளிகள் அவரின் தெய்வத்தைக் குறை கூறினால் என்னவாகும்?).

அவருக்கு சிவப்பு நிறம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்ததாகத் தோன்றலாம். அது அவரது perception. அது fact அல்லவே!

ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை நம் அனுபவக் கண்கள் கொண்டுதான் பார்க்கிறோம். ஒவ்வொருவரது வாழ்க்கை அனுபவமும் கைரேகை போல தனித்துவம் வாய்ந்தது. அப்படி இருக்க எப்படி ஒரே மாதிரி சிந்திக்கமுடியும்?

என் பார்வையில், நாம் perception என்பதின் முக்கியத்துவத்தை இன்னும் உணரவில்லை என்றுதான் படுகிறது. நமது ஒட்டு மொத்த சமூகத்திற்கே இன்னும் கொஞ்சம் எமோஷனல் மெச்சூரிடி வந்தால் நன்றாக இருக்கும்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 01, 2005

வாழ்க்கையைப் பாழடிக்கிறதா தாய்மொழிக்கல்வி?

Your Ad Here

சென்ற வருடம் பொறியியல் பட்டம் பெற்ற என் உறவுப்பையன் (ஆங்கிலத்தில் கஸின் என்று சொல்ல வசதியாக இருக்கிறது) ஒரு வருடமாக வேலை கிடைக்காத ஏமாற்றத்தில் தன்னைத் தமிழ் மீடியம் படிக்கவைத்து தன் வாழ்க்கையையே தன் பெற்றோர்கள் வீணாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். இது என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. (இப்படி எல்லாம் ஏதாவது நடக்காவிட்டால் சிந்தப்பதே இல்லையாக்கும்!)

தாய்மொழியில் கல்வி கற்பது வாழ்க்கையை சிதைக்கிறதா? அறிஞர்கள் எல்லாம் தாய்மொழிக்கல்வி மாணவர்களின் தரத்தை உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஏன் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது என்ற கேள்வி இயல்பாய் எழுகிறது. தாய்மொழியிலேயே பிரதானமாய் கல்வி கற்கும் சீனர்கள் அமெரிக்காவில் மேற்கல்விக்கோ அல்லது வேலைக்கோ செல்வதில்லையா? அவர்கள் எவரும் இப்படிக் குறை கூறித் திரிவதாகக் காணோமே! எங்கே இருக்கிறது குற்றம் -நமக்குள்ளா, நம் சமூகத்திலா?

நானும் ஒரு கிராமத்தில் தமிழ் மீடியம் பள்ளியில் படித்தவள்தான். ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் பேசத் தெரியாமல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைந்தவள்தான். அதனால் வெகுவாய் அவமானப்பட்டிருக்கிறேன் தான். ஆனால் அதனால் என் வாழ்வு சிதைந்து போகவில்லையே! என்னைப் போல பலரை என்னால் அடையாளம் காட்டமுடியும். நேர்முகத்தில் ஆங்கிலக் கேள்விகளுக்குத் தமிழில் சிறப்பாகப் பதிலளித்து வேலையைத் தட்டிச் சென்றவர்களிருக்கிறார்கள்தான்

நம் மாணவர்களிடம் இப்படிப்பட்ட ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதில் நம் சமூகத்துக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கியமான பங்குண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது. நியாயமாகப் பார்த்தால் கல்வி நிறுவனங்கள் இந்த நிலைக்குப் பொறுப்பெடுத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாழ்வு மனப்பான்மையையும் களைய ஆவன செய்வதை அவர்களின் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சனை குறித்துப் பல கேள்விகளுக்குப் பதில் காண ஆதங்கமாய் இருந்தாலும் அரிதாய்க் கிடைக்கும் நேரம் தீர்ந்துவிட்டதால் கேள்விகளை உங்களிடம் வைக்கிறேன்:

1. தாய்மொழி கண்போன்றது; அயல் மொழி கண்ணாடி போன்றது என்று நம் சமூகம் உணராமல் போனதற்கு என்ன காரணம்?

2. ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை என்கிற நிலை ஏன் வந்தது தமிழகத்தில்?

3. தாய்மொழிக் கல்வி கற்பவர்களுக்கு ஒருவேளை அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டுமோ?

4. பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டுமோ?

5. என்ன செய்தால் இது போன்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்கலாம்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.