.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, June 16, 2006

பிம்பம் - தேன்கூடு போட்டி

Your Ad Here

"என்னடா ஆச்சு சாமியாருக்கு? பளபளப்பா மாறிட்டு வர்றான்? மாப்பிள்ள வயசுக்கு வந்துட்டானாடா மச்சான்?"

கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்த பாலமுருகு தன்னைப் பற்றிய தன் நண்பனின் கமென்டுக்கு உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் முகம் வழக்கம்போல இறுகித்தானிருந்தது.

"உனக்கு விஷயம் தெரியாதா? ரொம்ப நாளா இவனோட க்ளாஸ் மேட் மலர் இவனுக்கு ரூட் போட்டுக்கிட்டிருந்தாள்ல? என்ன செய்தாளோ தெரியல, சாமியார் துறவறத்தைக் கலைச்சு குடும்பஸ்தனாயிட்டான்"

இந்த நக்கல்களையெல்லாம் புறந்தள்ளி பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பாலமுருகு.

"செமஸ்டர் லீவுக்கு அம்மணி ஊருக்கு போவுதுன்னு துரை பஸ் ஏத்திவிடப் போறாராம்"

"நெசமாத்தான் சொல்றியாடா? நம்ப முடியலையே?"

நண்பனுக்கு மட்டுமா நம்பமுடியவில்லை? பாலமுருகுவுக்கும்தான். எப்படி நடந்ததெனத் தெரியாத மாற்றம். பாறையின் நடுமத்தியில் பூப்பத்த அதிசயம்.

அறையை விட்டு வெளியில் வந்தான் பாலமுருகு. மனமெல்லாம் மலரிடத்தில்.

"மச்சான் லெட்டர்டா"

நண்பன் கையில் செருகிவிட்டுப் போன கடிதம் பெற்றோரிடமிருந்து வந்திருப்பது தெரிந்தது. விரைவில் ஊருக்கு வரச்சொல்லி எழுதியிருப்பார்கள்! பிரிக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

மொத்த ஹாஸ்டலில் எண்ணி பத்து பேருக்கு வீட்டிலிருந்து கடிதம் வருமாக இருக்கும். செல்ஃபோனெல்லாம் வந்துவிட்ட பிறகு யார் எழுத உட்கார்வார்கள்? ஆனால் பாலமுருகு டெலிஃபோனில் அகப்பட்டால்தானே?

இதயத்துக்கருகிலிருந்த கடிதம் நெஞ்சை நெருஞ்சியாய் உறுத்தியது.

'இவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை என்றுதானே ஊருக்குப் போவதைத் தவிர்த்து வருகிறேன்... எதற்கென்று இந்தக் கடிதம்?' பெற்றோர்களை நினைத்ததும் ஆழமாய்க் கசந்தது.

ஏழாவது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவன்தான் பாலமுருகு.

"மாடு மாதிரி வளந்தாச்சில்ல? இன்னும் என்ன அவனுக்கு தலை சீவி விட்டுக்கிட்டிருக்க?"

"பரிச்சை லீவில வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் இருந்துட்டுப் போன்னு சின்னராஜ் ஆசையா கூப்பிடறான். வெக்கமில்லாம எங்கம்மாவை விட்டுட்டு இருக்கமுடியாது சித்தப்பாங்கறான் உன் மகன்"

அப்பாவிடம் இப்படியெல்லாம் வசவு வாங்கிய பையன்தான் பாலமுருகு. ஆனால் எல்லாம் அந்த ஒரு ராத்திரியில் மாறிப் போய்விட்டது.

அன்றைக்குப் போட்டுக் கொளுத்திய வெயிலின் உக்கிரம் அந்த இரவுப் பொழுதிலும் உடம்பை உருக்க, வீட்டிலிருந்த எல்லாருக்குமாய் ஐஸ் சர்பத் வாங்கித் தந்தார் அப்பா. பாலமுருகுவுக்குப் பிடிக்குமென அம்மா தன் பங்கில் பாதியையும் அவனுக்குக் கொடுத்துவிட நட்ட நடு ராத்திரியில் பாத்ரூமுக்கு எழுந்து கொள்ள வேண்டியதாயிற்று.

பக்கத்தில் எப்போதும் படுத்திருக்கும் அம்மாவைக் காணாததில் சற்று குழம்பிப் போய் பாத்ரூமை நோக்கி நடந்தான் பாலமுருகு. அருகில் ஸ்டோர் ரூமிலிருந்து அம்மாவின் மெல்லிய முனகல் சத்தம் கேட்க, அவனுக்கு வயிற்றில் பிரளயம் எழும்பியது. 'அய்யோ வீட்டுக்குள் திருடன் வந்திட்டானோ? அம்மாவைப் பிடித்து வைத்திருக்கிறானோ?' அம்மாகோண்டுவான பனிரெண்டு வயது பாலமுருகுவை பயம் முழுவதுமாய் ஆக்கிரமித்தது. உடம்பு உதறியது. லேசாய்த் திறந்திருந்த ஜன்னலின் மேற்கதவு வழியாய்ப் பார்த்தவனுக்கு அருவருப்பில் உடம்பு கூசிப்போனது. 'ச்சீ... அம்மாவா இப்படி?'

அந்தக் காட்சியைப் பார்த்த கண்களைத் தோண்டி எறியவேண்டும் போல் ஆத்திரம் கொப்புளிக்க பாத்ரூமில் கேவிக் கேவி அழுதுவிட்டு வந்து பாயை எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான் பாலமுருகு. அதன் பிறகு வாழ்க்கையில் சகலமும் மாறிப் போனது.

அப்பாவின், அம்மாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத வெறுப்பில் தனக்குள் முடங்கிப் போனான் அந்தச் சின்னப் பையன். அவனைச் சுற்றி பெரிதாய் ஒரு கோட்டை எழுப்பிக் கொண்டதும் அப்போதுதான்

வயது ஏற ஏற விபரம் புரியப் புரிய இந்த இடைவெளி மேலும் வளர்ந்ததே ஒழிய குறைந்தபாடில்லை. பதினேழு வயதில் கல்லூரிக்குள் நுழையும்போது பெற்றோரின் மேல் மட்டுமல்லாமல் 'உடம்புக்கு அலையும் உலகம்' என்று இந்த உலகத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டிருந்தது.

பெண்கள் என்றால் ஏழு மைல் தூரத்துக்கு ஓடுவதும், ஆபாசம் என்று திரைப்படங்களை முற்றுமாய் நிராகரிப்பதும் போன்ற இன்ன பிற சமாச்சாரங்கள் இவனை சக மாணவர்களிடம் துறவியாய்க் காட்டின. அவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் எந்த எதிர்வினையும் காட்டாது அழுத்தமாய்த் தன் காரியத்தில் கண்ணாக இருப்பான் பாலமுருகு. கவனம் சிதற வாய்ப்பில்லாது போனதாலோ என்னவோ இதுவரை ஒன்று விடாமல் அத்தனை செமஸ்டர்களிலும் முதல் மார்க். அதுவும் ஒவ்வொரு முறையும் நல்ல வித்தியாசத்தில்.

"என்னதான் சொல்லு, சாமியாரின் புத்தி யாருக்கும் இங்கே இல்லைடா... அவன் எங்கேயோ நாம எங்கேயோ" என்று இரண்டாவது வருடத்திலேயே சகமாணவர்கள் ஒரே மனதாய் ஒப்புக்கொண்டாயிற்று. அவன் இருக்கும் வகுப்புக்கு சற்று அதிகப்படியாய் தயாராக வேண்டும் என்று பேராசிரியர்களுக்கும் புரிந்து போயிற்று.

அந்த கற்பூர புத்திதான் மலரை அவனிடம் ஈர்த்தது - ஆரம்பத்தில் வெட்கப் பார்வையும் சின்னச் சிரிப்புமாய் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது கொஞ்சமும் பிரயோசனமில்லாமல் போக, நேரிடையாக அவனிடம் சகஜமாய்ப் பேச ஆரம்பித்ததில் அவன் திகிலெடுத்து விலகி ஓட.... கடந்த இரு வருடங்களாய் நடந்த இந்தத் துரத்தல் சில நாட்களாய்த்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

வெறுக்க வெறுக்க, விலக விலக சற்றும் சளைக்காமல் அவள் காட்டிய அக்கறையும், அன்பும், கரிசனமும் தன்னை இந்த மாயவலைக்குள் இழுத்துப் போட்டுவிடும் என்று பாலமுருகுவே எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் அவளில்லாவிட்டாலும் வாழ்க்கை சற்றே இருட்டாய்த் தோன்ற ஆரம்பித்தபோதுதான் அவனுக்குப் புரிந்தது சுழலில் அகப்பட்டுவிட்டோமென்று.


செமஸ்டருக்கு முந்தைய நாள் அவள் பிறந்த நாளுக்கு அவன் ஒரு வெகு சாதாரண வாழ்த்தட்டையை கையெழுத்து கூட போடாமல் நீட்டியபோது, மலருக்கு மலருக்கு மனம் கொள்ளாப் பூரிப்பு. தொலைபேசியில் மெல்ல மெல்ல அவனைக் கரைத்து இன்று அவனை பஸ் ஸ்டாண்டுக்கு வரச்செய்தது அவளுக்குப் பெரிய சாதனையாகத்தானிருந்தது.

"மொதல் மொதலா ரெண்டு பேரும் வெளில வர்றோம். அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குப் போயிட்டு பஸ் ஸ்டாண்ட் போலாம்பா. நெறைய நேரம் இருக்கே" பஸ் ஸ்டாப்பில் அவளின் கெஞ்சலுக்கு செவிசாய்த்தான்.

கோவிலிலிருந்து வெளியில் வந்ததும், "அஞ்சே அஞ்சு நிமிஷம் இந்த மணல்ல உக்காந்துட்டுப் போலாம்" எங்கோ ஒதுக்குப் புறமாய் அழைத்துச் சென்றாள்.

'மலர் நல்ல பெண்; அவளுக்கு உடம்பு சுகம் பெரிதாயிருக்காது. என்னை என் மனசுக்காக நேசிக்கிற பெண். என்னை, என் விருப்புவெறுப்புகளைப் புரிந்து கொள்வாள்' என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தாலும் உள்ளுக்குள் உதறலாகத்தான் இருந்தது. 'ஒரு வேளை இவளும் சராசரிப் பெண்களைப் போல....'

மலர் மணலில் கோலம் போட்டுக் கொண்டே குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்; அவள் விருப்பு வெறுப்புகளை விவிரித்தாள்; அவனைப் பற்றி சிலாகித்தாள். பாலமுருகு கடலைப் பார்த்தவாறு 'உம்' கொட்டிக் கொண்டே அவள் அருகாமை தந்த இதத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

'தொட்டால்தான் சுகமா? இதோ இந்த இடைவெளி இருந்தும் மனசு சிட்டு போலப் பறக்கிறதே' அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே மலர் சட்டென்று இரு கைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் மார்பில் புதைந்து கொண்டாள். பாலமுருகு பதறி அனிச்சையாய் அவளைப் பிரிக்க அவள் இன்னும் இறுகிக் கொண்டாள். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிஸம்... மூச்சு முட்டும் நெருக்கம்... படீரென அவனது சமநிலையைக் குலைத்துப் போட்ட அந்த உணர்வை கிரகிக்குமுன்னே, நிமிர்ந்து அவன் உதட்டில் அழுத்தமாய் தன் அதரங்களைப் பதித்தாள் மலர். பாலமுருகு சுதாரிக்குமுன் சட்டென்று விலகி ஈரமான விழிகளுடன் அவன் பார்வையை ஆழமாய் ஊடுருவி கிசுகிசுப்பாய் 'ஐ'ல் மிஸ் யூ வெரி மச்' என்றாள். பின் தன் செயலுக்காய் வெட்கப்பட்டவள் போல பையை எடுத்துக் கொண்டு அவனுக்குக் காத்திராமல் ஆட்டோவை நோக்கி நடந்தாள்


பாலமுருகு பிரமித்து அமர்ந்திருந்தான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பேரின்பப் பிரவாகம் நிகழ்வதாய் உணர்வு. அவளின் ஸ்பரிஸம், இறுக்கம், முத்தம் எல்லாமாய் சில விநாடிகளே நிலைத்திருந்தாலும் யுகயுகமாய் நீடித்ததான பரிச்சயம். வெறும் உடம்பின் கிளர்ச்சியாய் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும்? அதையும் தாண்டிய ஆன்மானுபவம் போலல்லவா இருந்தது இந்த நிகழ்வு?

அவன் சுய ப்ரக்ஞை பெற்றபோது மலர் தூரத்தில் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் அவசரமாய் எழ முயற்சித்த கணம் ஆட்டோ வேகம் பிடித்தது.

பாதியாய் உணர்ந்தான் பாலமுருகு. அவனுக்கு அவள் மிகவும் தேவையாய் இருந்தாள். ஹார்மோன்கள் செய்யும் கலகம் என்று அவன் புத்தி இடித்துரைத்தாலும் தன் ஆன்மா அவளால்தான் முழுமைபெறும் போன்றதான தாகம் உயிரின் வேரைப் பிடித்தாட்டியது. கண்ணில் நீர் கொட்டியது. தாங்க முடியாத துக்கம் அவனைப் பீடித்தது. முழங்காலில் முகம் புதைத்து வெட்கமில்லாமல் அழுதான். அழுது முடித்த போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் மினுக் மினுக்கென மலர்கள் பூத்து அவளை மேலும் நினைவுபடுத்தின. கடற்காற்று அவளின் சுகந்தத்தைத் தன்னிடமிருந்து அழித்துவிடக் கூடாதென மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான். மனசு அடங்க மறுத்தது. பழசும் புதுசுமாய் நினைவுகளும் நிழல்களுமாய் சுழன்றடித்தன.

கால்களின் சோர்வை உணர ஆரம்பித்தபோதுதான் இரண்டுமணி நேரம் நடந்திருந்தது உறைத்தது. இன்னும் அரை மணி நடந்தால் ஹாஸ்டல். தண்ணீர் வாங்க சில்லறை எடுத்தபோது கையோடு வந்தது பெற்றோரின் கடிதம். என்னவோ உடனே படிக்க வேண்டுமென்பதான உத்வேகம் வர, தெரு விளக்குக்குக் கீழ் நின்று கடிதத்தைப் பிரித்தான். முதலிரண்டு வரிகளுக்கு மேல் படிக்க முடியாமல் கண்ணில் நீர் திரைகட்டிற்று.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பினான் பாலமுருகு. பஸ் ஏறுமுன் மறக்காமல் அம்மாவுக்கு ஒரு கண்ணன் பொம்மையும் அப்பாவுக்கு ஒரு உயர் ரகப் பேனாவும் வாங்கிக் கொண்டான்.

(முற்றும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

35 Comments:

At June 16, 2006 3:35 PM, Blogger FunScribbler said...

நிலா, பின்னிட்டீங்க போங்க...ரொம்ப பிடிச்சுருக்கு. இந்த மாதிரி இளையரிகளின் அறியாமையை பற்றி எழுதுவதில் நீங்க ரொம்ப திறமைசாலிதான் போங்க... அற்புதம்!

 
At June 16, 2006 4:42 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.. ஆனா, எனக்கு ஏதோ மிஸ்ஸாகுற மாதிரி எண்ணம்.. என்னன்னு சொல்லத் தெரியலை...

 
At June 16, 2006 5:44 PM, Blogger Kumari said...

This is a beautiful piece.
The shock for boys/girls to come across such a scene in their lives is always too earth shattering considering how naive one is at that age reg. sex plus the idea that our mom/dad wouldn't do anything so bad. You've captured that confusion and betrayal of trust very well.

All the best for the contest:) Naan e-kalappai-la indha commenta tamizhla ezhuthirathukulla romba nonthutten. So pls bear with me :)

 
At June 16, 2006 9:19 PM, Blogger யாத்ரீகன் said...

கதையின் ஆரம்பத்தில... பாலமுருகுவின் அந்த நிலைக்கு காரணமான எண்ண ஓட்டத்தை இயல்பா படம் பிடிச்சு இருக்கீங்க... ஆனா முடிவுல அப்படி பட்டுனு உணர்ந்ததை.. ஏத்துக்க முடியாத மாதிரி இருக்கு..

 
At June 16, 2006 10:48 PM, Anonymous Anonymous said...

*பொன்ஸ்*, //எனக்கு ஏதோ மிஸ்ஸாகுற மாதிரி எண்ணம்.. என்னன்னு சொல்லத் தெரியலை//-ன்னு எழுதியிருக்கீங்களே, இதுதானான்னு கொஞ்சம் பாருங்க:

தப்பித்தவறி அந்தக் காட்சியையே பார்த்துத் தொலைச்சிட்டாலும் பெற்றோர் மேல அப்படியொரு கடுமையான வெறுப்பா வரும்? ஒரு அருவருப்பு வேணா வரலாம்... கடுமையான வெறுப்பு??? என்னால அத ஒத்துக்கமுடியலப்பா!

மத்தபடி உங்க எழுத்துநடையும் கதை விறுவிறுப்பும் நல்லா இருக்கு நிலா. அவன் மனசுல காதல் சிறகடிக்கிறதை அழகா சொல்லியிருக்கீங்க.

 
At June 16, 2006 11:34 PM, Anonymous Anonymous said...

ஏனுங்க அவசரப்படுறீங்க..ஒரு கதை இந்த போட்டிக்கு எழுதியாச்சில்ல, கொஞ்சம் அடுத்த போட்டிக்கும் வச்சிருங்க..

 
At June 17, 2006 12:06 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

ரொம்ப இயல்பா இருக்குதுங்க கதை. எனக்கு கதை படிப்பதில் அவ்வளவாய் ஆர்வம் இல்லை. ஆனாலும் எழுத்து நடைகளின் இழுப்பில் சில கதைகளை படிக்க ஆரம்பித்துவிடுவேன்..அந்த வகையில் இதுவும் ஒன்று


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

 
At June 17, 2006 12:18 AM, Blogger மணியன் said...

இந்த மனமுதிர்காலம் உங்களுக்கு பிடித்த சூழல் போல் இருக்கிறது. இரண்டு ஆக்கங்களுமே ஒன்றையொன்று விஞ்சுவதால் யாருக்கு என்பதைத் தவிர எதற்கு ஓட்டு என்று குழப்பிவிடுகிறீர்களே.

 
At June 17, 2006 12:32 AM, Blogger கைப்புள்ள said...

உங்க எழுத்து நடையும், வர்ணனையும் வழக்கம் போலவே வெகு சிறப்பு மிஸ். ஆனா அம்மா மேலே அவ்வளவு பாசமா இருக்குற ஒரு பையன் தான் காணக் கூடாத ஒரு காட்சியைக் கண்டுட்டதால, வீட்டுக்குப் போகாம இருக்குற அளவுக்கு மனசுல வெறுப்பை வளர்த்துக்குவாங்கிறதை நம்புறது தான் கடினமா இருக்கு.

 
At June 17, 2006 9:12 AM, Blogger நிலா said...

பொன்ஸ்,
//வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.. //

அப்படீங்கறீங்க... இதில பாதி கிரெடிட்தான் எனக்கு. முதல் பாதி நான் படிச்ச ஒரு கேஸ் ஸ்டடியோட பாதிப்பு (குழந்தைகளின் மனோதத்துவத்தில் ஆர்வமிருப்பதால் இந்த டாபிக்கில் அதிகம் படிப்பதுண்டு)

//ஆனா, எனக்கு ஏதோ மிஸ்ஸாகுற மாதிரி எண்ணம்.. என்னன்னு சொல்லத் தெரியலை...//

சரி, தோணிச்சின்னா சொல்லுங்க

 
At June 17, 2006 9:39 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

சேதுக்கரசி,
//தப்பித்தவறி அந்தக் காட்சியையே பார்த்துத் தொலைச்சிட்டாலும் பெற்றோர் மேல அப்படியொரு கடுமையான வெறுப்பா வரும்? ஒரு அருவருப்பு வேணா வரலாம்... கடுமையான வெறுப்பு??? என்னால அத ஒத்துக்கமுடியலப்பா!//
இதுவும் ஒண்ணு.. அப்புறம், இந்த

//ஆனா முடிவுல அப்படி பட்டுனு உணர்ந்ததை.. ஏத்துக்க முடியாத மாதிரி இருக்கு.. //
இதையும் ஒத்துக்க முடியாத மாதிரி இருக்கு..
(மொத்தத்துல கதையோட ரெண்டு பாகத்தையும் குறை சொல்லியாச்சு!. என்ன பண்ண,, நாரதர்னு பேர் வச்சிட்டாங்க.. நிலா,,, அட்ஜஸ்ட் ::) )

ஏதோ இது ஆண்களின் கதை.. இதுல நான் சொல்வது தவறாக நிறைய வாய்ப்பிருக்கு.. பார்க்கலாம்..

 
At June 17, 2006 2:53 PM, Blogger கதிர் said...

ஒன்று, இரண்டு.......... எல்லாம் உங்களுக்குத்தான்.
என்னனு முழிக்காதிங்க.
நான் பரிசைத்தான் சொல்ரேன்.

அன்பு தம்பி

 
At June 18, 2006 12:34 AM, Blogger நிலா said...

//This is a beautiful piece. //


Thank you Kumari

//The shock for boys/girls to come across such a scene in their lives is always too earth shattering considering how naive one is at that age reg. sex plus the idea that our mom/dad wouldn't do anything so bad.//


உண்மை. இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவது சகஜம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்


//You've captured that confusion and betrayal of trust very well.//

thanks again

 
At June 18, 2006 3:20 AM, Blogger நிலா said...

//கதையின் ஆரம்பத்தில... பாலமுருகுவின் அந்த நிலைக்கு காரணமான எண்ண ஓட்டத்தை இயல்பா படம் பிடிச்சு இருக்கீங்க... //

நன்றி யாத்ரீகன்

//ஆனா முடிவுல அப்படி பட்டுனு உணர்ந்ததை.. ஏத்துக்க முடியாத மாதிரி இருக்கு..//

அப்படியா? சரி...

ஆனால் ஆன்மானுபவம்னு தெரிஞ்சம்ப்பறம் நெறைய யோசிக்கறான்... சில விநாடிகள் அனுபவத்திலேயே தன் காதலியோட தேவை தனக்குத் தெரியறப்ப இதெல்லாம் சகஜம்னு உணர்றது ஸ்லோ ப்ராசஸாக இருக்கும்னு எனக்குப் படலை.


உதாரணத்துக்கு நீங்க தப்புன்னு நெனச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயத்தை உங்க நண்பர் செஞ்சிட்டார்ங்கறதுனால அவர் மேல ஏகப்பட்ட கோபம் இருக்குன்னு வச்சிக்கலாம். நீங்களும் அதே சூழல்ல தள்ளப்படறப்போ அதை சகஜம்ங்கறதை உணர்ந்தா கோபம் போயிடாதா? கோபமே அது தவறுன்னு நினைக்கறதாலதானே?

ஆனா இந்த மாதிரி விளக்கமெல்லாம் கொடுக்கற மாதிரி ஒரு படைப்பு அமையக்கூடாதுன்னு நான் நினைப்பேன்...

அதனால உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அடுத்த முறை கவனமா இருக்க உதவும்

 
At June 18, 2006 8:14 AM, Blogger நிலா said...

//தப்பித்தவறி அந்தக் காட்சியையே பார்த்துத் தொலைச்சிட்டாலும் பெற்றோர் மேல அப்படியொரு கடுமையான வெறுப்பா வரும்? ஒரு அருவருப்பு வேணா வரலாம்... கடுமையான வெறுப்பு??? என்னால அத ஒத்துக்கமுடியலப்பா!//

அட போங்கப்பா... இங்கேயுமா? :-)))))

சேது, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ஒரு கேஸ் ஸ்டடியை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இது சாத்தியமே...

ஆனால் உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதை நான் மாற்ற முற்படுவது வீண். எல்லோராலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிந்தால் அப்புறம் என்ன இருக்கிறது :-)


//மத்தபடி உங்க எழுத்துநடையும் கதை விறுவிறுப்பும் நல்லா இருக்கு நிலா. அவன் மனசுல காதல் சிறகடிக்கிறதை அழகா சொல்லியிருக்கீங்க.//

நன்றி

 
At June 18, 2006 2:00 PM, Blogger நிலா said...

//ஏனுங்க அவசரப்படுறீங்க..ஒரு கதை இந்த போட்டிக்கு எழுதியாச்சில்ல, கொஞ்சம் அடுத்த போட்டிக்கும் வச்சிருங்க..//

இதே கரு அடுத்த போட்டிக்கு இருக்காதுங்களே??!!!

 
At June 18, 2006 11:05 PM, Blogger நிலா said...

//ரொம்ப இயல்பா இருக்குதுங்க கதை. எனக்கு கதை படிப்பதில் அவ்வளவாய் ஆர்வம் இல்லை. ஆனாலும் எழுத்து நடைகளின் இழுப்பில் சில கதைகளை படிக்க ஆரம்பித்துவிடுவேன்..அந்த வகையில் இதுவும் ஒன்று
//


நன்றி ரசிகவ்

 
At June 18, 2006 11:28 PM, Blogger Unknown said...

நிலாக்கா,

இதைக் க்தை என்று சொல்வதை விட உளவியல் ஆராய்ச்சி என்று சொல்லலாமா?
நீங்கள் எடுத்துக் கொள்ளும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் சமுதாயத்தின் இயல்பை விட்டு ஒரளவு தள்ளி இருக்கும் மனநிலையிலே சித்திரிக்கப் படுவ்து ஏனோ?

இல்லை அப்படி எனக்குத் தோன்றுகிறதா?

பிம்பம் - சலனம் ( சன் டி.வி விமர்சனம் ஸ்டைலில் படிக்கவும்)

 
At June 19, 2006 12:25 AM, Blogger நிலா said...

// என்ன பண்ண,, நாரதர்னு பேர் வச்சிட்டாங்க.. நிலா,,, அட்ஜஸ்ட் ::) )//


பொன்ஸ்,
அப்ப நன்மையிலதான முடியும்? பிறகெதுக்கு கவலைப்படணும் :-))

 
At June 19, 2006 2:24 AM, Blogger நிலா said...

//ஒன்று, இரண்டு.......... எல்லாம் உங்களுக்குத்தான்.
என்னனு முழிக்காதிங்க.
நான் பரிசைத்தான் சொல்ரேன்.

அன்பு தம்பி //

அன்பு தம்பி

நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கைக்கு நன்றி.
ஆனா அப்படி எல்லாம் எடுத்துக்க முடியாது... பார்ப்போம்

ஆனா பாருங்க, நீங்கல்லாம் இப்படி சொல்றதே எனக்கு பரிசு கிடைச்ச மாதிரிதானிருக்கு :-)

 
At June 19, 2006 2:51 AM, Anonymous Anonymous said...

etho onnu edikira feeling,ethunu correcta solla therila,overall kathai nalla eruku

 
At June 19, 2006 4:40 AM, Blogger நிலா said...

//இந்த மனமுதிர்காலம் உங்களுக்கு பிடித்த சூழல் போல் இருக்கிறது. //

பொதுவாக உளவியலில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு - முக்கியமாக குழந்தைகள் மனோதத்துவத்தில்.


//இரண்டு ஆக்கங்களுமே ஒன்றையொன்று விஞ்சுவதால் யாருக்கு என்பதைத் தவிர எதற்கு ஓட்டு என்று குழப்பிவிடுகிறீர்களே.//

கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் போட்டியில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... உங்கள் ஓட்டை இழந்துவிட்டேன் போலிருக்கிறதே :-)))

 
At June 20, 2006 12:20 AM, Blogger நிலா said...

//உங்க எழுத்து நடையும், வர்ணனையும் வழக்கம் போலவே வெகு சிறப்பு மிஸ். //

வ.வா.சங்கத்தின் தல சொன்னா சரிதான் :-)


//ஆனா அம்மா மேலே அவ்வளவு பாசமா இருக்குற ஒரு பையன் தான் காணக் கூடாத ஒரு காட்சியைக் கண்டுட்டதால, வீட்டுக்குப் போகாம இருக்குற அளவுக்கு மனசுல வெறுப்பை வளர்த்துக்குவாங்கிறதை நம்புறது தான் கடினமா இருக்கு.//


கைப்ஸ், அங்கேதான் பிரச்சனையே... எவ்வளவுக்கெவ்வளவு அன்பாக இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனை அதிகம் பாதிக்கும் என்பதாகத்தான் படித்திருக்கிறேன். இத்தகைய நிகழ்வைப் பார்க்கிற அனைவரும் பாலமுருகுவாக உருவாவார்கள் என்பதல்ல என் கருத்து. ஆனால் அதில் சிலருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது ஒரு fact.

கதையைப் படித்துவிட்டு என் கணவர், இதைப் பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போக வாய்ப்புண்டு என்று சொன்னார். இதற்குக் காரணம் இது மிக மிக நுணுக்கமான, சென்சிடிவான விஷயம்... இப்படி பாதிக்கப்பட்டவர்கள் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனால் இந்தக்கருவை எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

வெளிப்படையான கருத்துக்களை வழக்கம்போல வரவேற்கிறேன்

 
At June 20, 2006 8:06 AM, Anonymous Anonymous said...

I liked the other one better.
Unga nadai romba nalla irukku. Azhaga ezhuthareenga. The way you have moved the story is also nice.

aanaa indha story line konjam convincinga illa. Neenga erkanave explanation solliteenga aana kathai padichu mudichodana varra unarva solliten. Sorry, but thats just my opinion. Hope you dont mind.

 
At June 20, 2006 8:16 AM, Blogger நிலா said...

dubukku

நான் அடிக்கடி சொல்வது போல 'தட்டினாலும் குட்டினாலும் ஏற்றுக் கொள்வேன்'. நேர்மையான விமரிசனங்கள் என்னை செதுக்கும் என்றே நம்புகிறேன்

வெளிப்படையான உங்கள் கருத்துக்களை வரவேற்கவே செய்கிறேன்

இந்த இரு படைப்புகளின் பின்னூட்டங்கள் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்

அதனால் நான் உங்களுக்கெல்லாம் நன்றிதான் சொல்ல வேண்டும் - தவறாக எடுத்துக் கொள்ள ஏதுமில்லை :-)

தொடர்ந்து விமரிசியுங்கள். குறைகளை - எவ்வளவு சிறியவையாக இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்

 
At June 20, 2006 10:57 AM, Blogger மணியன் said...

நிலா, நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
இதுதான் பதில் மரியாதை இல்லையா :))

 
At June 20, 2006 12:53 PM, Anonymous Anonymous said...

அட ஏங்க இப்படியெல்லாம், உங்களுக்கு குறைகளை சுட்டிக் காட்டுறவங்களைத்தான் பிடிக்க மாட்டேங்குதே. அப்புறம் எதற்குங்க இந்த சப்பைக்கட்டு, ஆக்கப்பூர்வமான பார்வை இருக்குன்னு காண்பிக்கவா? சிரிப்பு வருதுங்க.

அப்புறம் ஒரு விஷயம் உங்க சொந்த பேரு நிர்மலாவாம்ல, அப்ப இதுதான் உங்கள் படைப்புக்களுக்கு பின்னால் பெயர் போட்டுக்கொள்ளும் லட்சணமா?

 
At June 20, 2006 1:01 PM, Blogger சேதுக்கரசி said...

யாருன்னு தெரிவிக்காம, பேர் சொல்ல பயந்துக்கிட்டு "அனானி"கள் இடும் அனாமத்தான கமெண்டுகளுக்கெல்லாம் ஏன் நிலா இடம் கொடுக்கணும்?!

 
At June 20, 2006 11:08 PM, Blogger நிலா said...

//நீங்கள் எடுத்துக் கொள்ளும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் சமுதாயத்தின் இயல்பை விட்டு ஒரளவு தள்ளி இருக்கும் மனநிலையிலே சித்திரிக்கப் படுவ்து ஏனோ?//

தேவ்

என் படைப்புகளில் ஒரு ட்ரெண்ட் அல்லது பேட்டர்ன் இருக்கக்கூடாது என்று விருப்பப்படுவேன்.

இது குறித்து சிந்திக்கிறேன்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

நீங்க இந்த இரு கதைகளை மட்டும் வச்சு சொல்லிடலைனு நினைக்கிறேன். ஏன்னா இதுக்கான கரு அப்படி. நினைவு வந்தா இது போல உங்களை எண்ணத் தோன்றிய இன்னொரு கதையைச் சொல்லுங்கள். உதவியாக இருக்கும்

 
At June 21, 2006 3:00 AM, Blogger நிலா said...

//etho onnu edikira feeling,ethunu correcta solla therila,overall kathai nalla eruku//

அனானி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 
At June 21, 2006 4:28 AM, Blogger நிலா said...

//யாருன்னு தெரிவிக்காம, பேர் சொல்ல பயந்துக்கிட்டு "அனானி"கள் இடும் அனாமத்தான கமெண்டுகளுக்கெல்லாம் ஏன் நிலா இடம் கொடுக்கணும்?!//

சேது
விளக்கமளிக்கலாம் என நினைத்துத்தான் அனுமதித்தேன்
ஆனால் தூங்குபவர்களை எழுப்பலாம்... தூங்குவதாகப் பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முயன்று ஏன் சக்தியைச் செலவழிப்பானேன் என்று தோன்றிவிட்டது.

 
At June 21, 2006 4:30 AM, Blogger நிலா said...

//நிலா, நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
இதுதான் பதில் மரியாதை இல்லையா :)) //

மணியன்,
அழைத்ததற்கு நன்றி
பழசை மறக்க மாட்டீர்கள் போலிருக்கிறது :-)

 
At June 23, 2006 12:08 AM, Blogger நிலா said...

tamila tamila


பிடித்த படைப்புகளனைத்துக்கும் ஓட்டுப் போடலாமே? அதனால் சிதற வாய்ப்பில்லை. தவிர, இந்தத் தலைப்பில் இரு கதைகள் எழுத நேர்ந்துவிட்டது. வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்! பதிந்தாலாவது கருத்துக்களைக் கேட்கலாம். கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையுமே என்றுதான் இட்டேன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

 
At November 29, 2006 5:52 PM, Blogger Divya said...

ரொம்ப நல்ல இருக்குதுங்க உங்கள் கதை, உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது

 
At December 01, 2006 2:50 AM, Blogger நிலா said...

நன்றி, திவ்யா

 

Post a Comment

<< Home